இலங்கையில், விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற சண்டையில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. கணக்கெடுப்பில் தெரிய வந்தது. இந்த விவகாரம் குறித்து கடந்த 2015–ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து பல்வேறு நாட்டு நீதிபதிகளைக் கொண்டு, 18 மாதங்களுக்குள் இலங்கை அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
ஆனால், விசாரணையில் அக்கறை செலுத்தாத இலங்கை அரசு, இந்த விசாரணைக்காக மேலும் 2 ஆண்டுகள் கால அவகாசம் அளிக்குமாறு ஐ.நா.விடம் கேட்டுள்ளது. இத்தகவலை இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.ஆனால், கால நீட்டிப்பு தரக்கூடாது என்று தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் உள்ள தமிழ் அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.